Friday, December 3, 2021

சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் மறைமலையடிகளார்





திருநெல்வேலித் தென்னிந்தியச் சைவசித்தாந்தக் கழகத்தினரால் வெளியிடப்பட்ட செந்தமிழ்ச்செல்வி இதழில் 18-5-1935-ஆம் நாள் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் மறைமலையடிகளார் தலைமையில் நடந்த தமிழறிஞர் கூட்டம் பற்றிய செய்தியை அப்படியே தந்துள்ளேன்.
 

Monday, February 27, 2017

சிலப்பதிகாரப் பெருவிழா 2017

                சிலப்பதிகாரப்
                 பெருவிழா-2017

அன்னைத்தமிழின் மூவாயிரம் ஆண்டு இலக்கியவரலாற்றில் காலத்தால் முற்பட்ட காப்பியம் சிலப்பதிகாரம்;காலத்தால் மட்டுமின்றி கலைநலத்தாலும், கருத்துச்செறிவாலும், முத்தமிழ்க் கூறுகளும் முழுமையாகப் பெற்று,தமிழர் நாகரிகம் பற்றிய சமூக ஆவணமாகச் சிறந்திலங்குவது சிலப்பதிகாரம்  ஆகும்.அதன்பின் ஆயிரமாயிரம் காப்பியங்கள் மலர்ச்சி  பெற்றுத் தமிழின் வளர்ச்சிக்குச் சான்றாக விளங்குகின்றன .அத்தனைக் காப்பியங்களும் சுவையும் நயமும் பொருட்சிறப்பும் பெற்றனவே. ஆனால் தமிழருக்குத் தன்மானம், சுயமரியாதை,தமிழ்வீறு ஆகியவற்றை அளிக்கும் தனிச்சிறப்புப் பெற்ற ஒரே காப்பியம் சிலப்பதிகாரமேயாகும்.
சிலப்பதிகாரத்தைக் கற்கும் ஒவ்வொரு தமிழரும் தமிழ்க்கலை,தமிழிசை,தமிழ்நாடகம் ஆகியன பற்றிய தெளிந்த அறிவு பெறுவதுடனந்தமிழின ஒருமைப்பாட்டுணர்வும் பெறுதல் திண்ணம்.
சிலப்பதிகாரத்தைப் பரப்பினால் தமிழ்த்தேசியம், தமிழர் தன்மான உணர்வு ஆகியவற்றைத் தமிழ்ச் சமுதாயம் பெற்றிடும். பெற்றிடுவர்
“நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணீயாரம் படைத்த தமிழ்நாடு”எனப் பாரதியார் போற்றிய சிலப்பதிகாரத்தை உலகெல்லாம் பரப்பும் நோக்கத்துடன் சிலம்பொலி சு.செல்லப்பனார் சிலப்பதிகார அறக்கட்டளை என்னும் அமைப்பை 2014-ஆம் ஆண்டு நிறுவினார்.
சிலப்பதிகாரத்தைப் பரப்புதற்கு மாநாடுகள், கருத்தரங்குகள், கூட்டங்கள் நடத்திடுதலும் சிலப்பதிகாரத்திற்குத் தொண்டாற்றியவர்களுக்கு ஆண்டு தோறும் “இளங்கோ விருது”வழங்குதலும் இந்த அறக்கட்டளையின் செயல்முறைகளுள் அடங்கும்.
2014-இல் சென்னையிலும் 2015-இல் நாமக்கல்லிலும் சிலப்பதிகார மாநாடுகள் நடைபெற்றன.
2016 & 2017-ஆம் ஆண்டுக்கான இளங்கோ விருதுகளும் இளைய சிலம்பொலி விருதுகளும் 27/2/2017-ஆம் நாளில் சென்னையில் நடைபெற்ற  சிலப்பதிகாரப்பெருவிழாக்கள் சென்னை எம்.ஜி.ஆர்.-ஜானகி கல்லூரியுடன் இணைந்து அக் கல்லூரியில் நடைபெற்றன.
 
டாக்டர் எம்.ஜி.ஆர்-ஜானகி கலை அறிவியல் கல்லூரியின் தாளாளர் புரட்சித்தலைவர் அவர்களின் புகழ்பூத்த குடும்ப உறுப்பினர்களுள் ஒருவராகிய திருமதி. இலதா இராசேந்திரன் அவர்கள் குத்துவிளக்கேற்றி விழாவுக்கு ஒளியும் பொலிவும் வழங்கினார்.
முத்தமிழ்க்கலா வித்வ ரத்னம் ஔவை டி.கே.சண்முகனாரின் மூத்த புதல்வர் முதிரந்த இசைவாணர் தமிழிசைத்தென்றல் டி.கே.எஸ்.கலைவாணன் அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார்
27/2/2017-ஆம் நாள் காலை 10-30 மணிக்குத் தொடங்கிய விழாவில் இக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராகவும் மொழிப்புலத்தின் முதன்மையராகவும் பணியாற்றும் பேராசிரியர் அபிதாசபாபதி அவர்கள் கல்லூரியின்  சார்பாக வரவேற்புரை வழங்கினார்
விழாக்குழுவின் சார்பில்  கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் அவர்கள்  வரவேற்புரையாற்றினார்.அவர் தமது வரவேற்புரையில் சிலம்பின் தனிச்சிறப்புப் பற்றியும்  சிலப்பதிகார அறக்கட்டளை நிறுவிய சிலம்பொலியார் அவர்களின் தமிழ்ப்பணி பற்றியும் விரிவாகப் பேசினார்.
பி.ஜி.பி.கல்விக்குழமங்களின் தலைவரும் தொழிலதிபருமாகிய பழனி ஜி..பெரியசாமி அவர்கள் விழாவுக்குத்  தலைமை தாங்கினார் .புரட்சித்தலைவரின் பேரன்பினைப் பெற்றவர் பழனி ஜி..பெரியசாமி அவர்கள்.மக்கள்திலகத்தின் உடல்நலனைப் பேணும்வகையில் தக்கநேரத்தில் உற்ற துணை புரிந்தமையால் தமிழ்கூறு நல்லுலகெங்கும் அளவிலாப் புகழ்பெற்ற அருஞ்செயலாளர். சிறப்புவாய்ந்த பேராசிரியராக அமெரிக்கநாட்டில் பெருமிதமிக்க பணியாற்றியவர். கழனி செழிக்கவும் கட்டடங்கள் பெருகவும்  மருத்துவம் சிறந்தோங்கவும் தொழில்பல ஆற்றிடும் தொழிலதிபர்.இவற்றை விடச் சிலம்பொலியாரின் சிறப்புமிக்க மாணவர்களுள் தாமும் ஒருவர் என்பதனைப் பெருமையாகக் கருதும் பெருந்தகையாளர்.அழகுத்தமிழில் அருமைமிக்க தலைமையுரை ஆற்றினார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் லோக் அதாலத் நடுவர். நீதியரசர் தி.ந.வள்ளிநாயகம் அவர்கள்  விருதுகள் அளித்து வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாட்டில் துலைக்கோலின் முள்ளாக முறைவழங்கும் நடுவர்களின் நாயகம் எனப் பாராட்டத்தக்க நீதியரசர் தி.ந.வள்ளிநாயகம் அவர்கள் இனிய தமிழில் சிலம்பின் சீர்மையையும் சிலம்பொலியார் அவர்களின் தொண்டுள்ளத்தையும் போற்றித் தமது வாழ்த்துரையை வழங்கினார்.
2016-ஆம் ஆண்டுக்கான இளைய சிலம்பொலி விருது செல்வன்.கோ.சரவணன் அவர்களுக்கும் செல்வி கோ.சு.சிம்ஹாஞ்சனா அவர்களுக்கும் பேராசிரியர் இராம.குருநாதன் அவர்களாலும் விழிகள் தி.நடராசன் அவர்களாலும் வழங்கப்பட்டன.
2017-ஆம் ஆண்டுக்கான இளைய சிலம்பொலி விருது செல்வன் அருணை மா.மதன்குமார்  அவர்களுக்கும் செல்வி ஆர் சிரீகீர்த்தனா அவர்களுக்கும் கல்லூரி முதல்வர் பேராசிரியர் ஆர்.மணிமேகலை அவர்களால் வழங்கப்பட்டது.
2016-ஆம் ஆண்டுக்கான இளங்கோ விருது ‘சிலம்பொலியாரின் சீர்மிகு முன்னோடியாகிய  சிலம்புச்செல்வர் அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பெற்றது. ம.பொ.சி. அவர்களின் அன்புப்புதல்விகளுள் மாதவி பாஸ்கரன் அவர்களுக்கும்  கண்ணகி  அவர்களுக்கும் சிலம்புசெல்வரின் புதல்வர் திருநாவுக்கரசு அவர்களின் பிள்ளைகளுக்கும் பகிர்ந்து (உரூ.35,000 வீதம்) வழங்கப்பெற்றன.
2017-ஆம் ஆண்டுக்கான இளங்கோ விருது சேக்சுபியரையும் மில்டனையும் கீட்சையும் முழங்கிய வாயால் சிலப்பதிகாரத்தைச் செந்தமிழிலும் ஆங்கிலத்திலும் உலகெலாம் பரப்பிவரும் முனைவர் கா.செல்லப்பனார் அவர்களுக்கும் சிலம்பு மறு வாசிப்பு’ என்னும் நூலை இயற்றிய திறனாய்வாளர் பேராசிரியர் தி.சு.நடராசன் அவர்களுக்கும் பகிர்ந்து (உரூ.50,000/ வீதம்) வழங்கப்பெற்றன.
நிறைவாக முனைவர் கா.செல்லப்பனார் அவர்கள், இளங்கோ அடிகளையும் சேக்சுபியரையும் ஒப்பீடு செய்து ஓர் அரிய உரையாற்றினார்.
டாக்டர் எம்.ஜி.ஆர்-ஜானகி கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் பதின்மர் கொண்ட நாட்டியக்குழு வித்தகக் கலைஞர்களின் வழிகாட்டுதலில் முத்தமிழ்க்காப்பியமாம் சிலப்பதிகாரத்தை நாட்டியநிகழ்ச்சியாகக் கலைநலன் மிளிர நடத்தி அவையினர் அனைவரையும் வைத்த கண் இமைக்காமல் பார்க்கவைத்தது.
 மக்கள் திலகம்,புரட்சித்தலைவர் எனத் தமிழ்கூறு நல்லுலகினரால் போற்றப்பட்ட எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவைப் போற்றும் அறப்பணிகளுள் ஒன்றாகிய டாக்டர் எம்.ஜி.ஆர்-ஜானகி கலை அறிவியல் கல்லூரி இந்தச் சிலப்பதிகாரப் பெருவிழாவை, சிலப்பதிகார அறக்கட்டளையுடன் ஒருங்கிணைந்து நடத்தியது. இப் பெருவிழாவை ஈடற்ற முறையில் நடத்திய கல்லூரியும் அதன் தாளாளரும் முதல்வரும் தமிழ்த்துறைத்தலைவரும் தமிழ்ப் பேராசிரியர்களும் ஏனைய துறைத்தலைவர்களும் பேராசிரியர்களும் திரளாக வந்திருந்து  விழா சிறக்கக் காரணமாகத் திகழ்ந்த மாணவிகளும் உற்றுழி உதவிய ஊழியர்களும் பாராட்டுக்கு உரியவர்கள்.
சிலப்பதிகார அறக்கட்டளைச் செயலாளரும்  சிலம்பொலியாரின் அன்புப்புதல்விகளுள் ஒருவருமாகிய  நூலாசிரியர், சொற்பொழிவாளர்,முனைவர் மணிமேகலை புஷ்பராஜ் அவர்கள்,விழாத் தொகுப்பாளர் திருமதி உமா அமராபதி அவர்கள், கணியச்சுப் பணிகளையும் இணையத் தொடர்பையும் சிறப்புடன் மேற்கொண்ட சிலம்பொலியாரின் மருகர் பொறியாளர் புஷ்பராஜ் அவர்கள், சிலம்பொலியாரின் புதல்வர்  கொங்குவேள்,அவருடைய துணைவியார்,சிலம்பொலியாரின் மற்றொரு புதல்வி மருத்துவர்.கௌதமி அவர்கள்,ஏனைய உறவினர்கள்,வழக்கறிஞர் பால.சீனிவாசன்,திருமதி.வாசுகி பத்ரிநாராயணன்,அமிழ்தத்தமிழாய்வு மன்ற அமைப்பாளர் இளவர அமிழ்தன் என விழா சிறப்பாக நடைபெறத் தொண்டாற்றியோர் பலராவர்.
மாணவியர் திரளும் நகர்ச்சான்றோர்கள் திரளும் எனப் பெருங்கூட்டம் அவையை அணிசெய்தது. திரளாக வந்திருந்து விழா சிறக்க உதவிய பார்வையாளர்களில் டாக்டர் எம்.ஜி.ஆர்-ஜானகி கலை அறிவியல் கல்லூரி மாணவிகளுடன் சென்னைப்பல்கலைக்கழக மொழித்துறை, இலக்கியத்துறை மாணவர்களும் அரசிமேரி கல்லூரி மாணவிகளும் மாநிலக்கல்லூரி மாணவர்களும் பேராசிரியர்களும் பாவலர்களும் எழுத்தாளர்களும் எனப் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.
சென்னைக்கம்பன் கழகச் செயலாளர் இலக்கியவீதி இனியவன்,அம்பத்தூர்க் கம்பன் கழகச் செயலாளர் பழ.பழனியப்பம்,இலக்கியச்சிந்தனை அமைப்பின் செயலர் ப.இலக்குமணன்,வியாசர்பாடி முத்தமிழ் மன்றச் செயலாளர் கா.ஆதிகேசவன்,ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றச் செயலர் கெ.பக்தவத்சலம்,கவிஞர் மு.மேத்தா,கவிஞர் நா.காமராசன்,கவிஞர் அறிவுமதி,புதுகைத்தென்றல் ஆசிரியர் தருமராசன், கி.ஆ.பெ.அவர்களின் புதல்வியார் மணிமேகலை கண்ணன், பன்மொழிப்புலவர் கண்ணன்,மூத்த வழக்கறிஞர் காந்தி,சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத்தலைவர் ஒப்பிலா மதிவாணன், பேராசிரியர் ய.மணிகண்டன், மாநிலக்கல்லூரிப் பேராசிரியர்கள்,விவேகானந்தா கல்லூரிப் பேராசிரியர்கள் என அவையினரின் பட்டியலை விரித்துரைத்தால் தலைநகரின் தலைசிறந்த வித்தகர்களின் பட்டியலாகச் சிறந்துவிளங்கும்.
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் முழங்கிவரும் பேரறிஞர், சிலம்பொலியார் அவர்களின் சிறப்பும் இளங்கோவின் உயர்வும் உள்ளம் நிறைக்கும் வகையில் விழா சிறப்பாக நடைபெற்றது.


Sunday, April 24, 2016

ஔவைக்கு முத்துவிழா

                              ஔவைக்கு முத்துவிழா
24/4/2016 அன்று முனைவர் ஔவைநடராசன் வரகளின் 81-ஆம் பிறந்தநாள்.ஆம்.அன்று அவர் முத்துவிழாக் காண்கிறார்.எளிமையை விரும்பும் அவருக்கும் அவர்தம் துணைவியார் மருத்துவமாமணி தாராபாய் அவர்களுக்கும் பெரிய விழாக்களில் விருப்பமில்லை.எனவே அவருக்குப் புலவர்குழுவின் சார்பில் எங்கள் வாழ்த்துகளை அவருடைய இல்லத்துக்குச் சென்று தெரிவிக்கலாம் என முடிவு செய்தோம்.எங்கள் புலவர்குழுத்தலைவர் சிலம்பொலியார் ஆவார்.இந்தச் சுட்டெரிக்கும் வெயிலில் அவர் திருவான்மியூரிலிருந்து பயணம் மேற்கொள்ளவேண்டாம் என வலியுறுத்திக் கூறினோம். நேரில் வருவேன் என அவர் கூறினாலும் இந்த வெயிலில் அவர் தொலைபேசி  மூலம் வாழ்த்துத் தெரிவிப்பதே நலம் என நாங்கள் வேண்டிக்கொண்டதனை அவர் ஏற்றுக் கொண்டார்.
புலவர்குழுப் பொறுப்பாண்மைக்குழுத் தலைவர்  மருத்துவர் மணிமேகலை கண்ணன்,புலவர்குழுத் துணைத்தலைவர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் செயற்குழு உறுப்பினர் முனைவர் வாசுகி கண்ணப்பன் அவர்கள்,செயலாளராகிய நான்(மறைமலை( ஔவை அவர்களின் இல்லத்துக்குக் காலை பத்தரை மணிக்குச் சென்றோம்.எழுத்தாளர் கழகச் சார்பிலும் கவிதை உறவு சார்பிலும் கவிஞர் ஏர்வாடியார், மேலும் மேனாள் மேயர் சா.கணேசன் ,த.கு.திவாகரன் ஆகியோரும் ஔவைபால் கொண்ட அன்பால் வந்திருந்தனர்.
பெருங்கவிக்கோ ஔவை வாழ்விணையரை வாழ்த்தி  ஒரு வாழ்த்துப்பா  இயற்றி வழங்கினார்.
முனைவர் வாசுகி கண்ணப்பன் அவர்கள் ஒரு வாழ்த்துப்பாடலைப் பாடினார்
அதன்பின்னர் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களையும் அன்பையும் தெரிவித்து விடைபெற்றனர்.வந்திருந்த அனைவரையும் வரவேற்று ஔவை அவர்களின் புதல்வர் முனைவர் அருள்,அவரது துணைவியார் சாலைவாணி ஆகிய இருவரும் சிற்றுண்டி வழங்கினர்.நல்லறிஞரையும் அவரது துணைவியார் அவர்களையும் வாழ்த்திய மகிழ்வில் அனைவரும் விடைபெற்றனர்.

Monday, April 18, 2016

ச.முத்துக்குமரனார்


தமிழகப் புலவர் குழு நடத்திய சமச்சீர்க் கல்வித் தந்தை ச.முத்துக்குமரனார் நினைவேந்தல்
 பாரதிதாசன்  பல்கலைக்கழகத்தின்   முன்னைத்துணைவேந்தரும் சமச்சீர்க்கல்வித்  தந்தையுமாகிய              ச.முத்துக்குமரனார்
14/4/16 அன்று புகழுடல் எய்தினார். அவரின்    நினைவேந்தலை 17/4/16 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கமும் தமிழகப்புலவர்குழுவும் இணைந்து நடத்தின.
மேனாள்பள்ளிக்கல்விஅலுவலர்   தொண்ணூற்றுமூன்று கவை நிறைந்த திருமதி.காந்திமதி அவர்கள் இல்லத்தில் அவர்கள் முன்னிலையில் இந்த நினைவேந்தல் நடந்தது. அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கச் செயலாளர் த.சுந்தரராசன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். 
                                              
முன்னதாக ச.முத்துக்குமரனார்   அவர்களின்  திருவுருவப் படத்தைப் பெருங்கவிக்கோ திறந்து மலர்மாலை அணிவித்தார்.



பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள்   சமச்சீர்க்கல்வித்  தந்தை  ச.முத்துக்குமரனார்   அவர்களின் நினைவைப் போற்றிப் புகழ்வணக்கம் செலுத்தும் வகையில் யையறுநிலைப் பாடல் வழங்கினார்.
தமிழகப் புலவர் குழுச் செயலாளர்  மறைமலை இலக்குவனார்,   இரங்கல் தீர்மானத்தைப் படித்தபின்னர் கூட்டத்தினர் மூன்று நிமிடம் அமைதியாக எழுந்துநின்றனர்.
தீர்மானம் பின்வருமாறு அமைந்தது.
இரங்கல் தீர்மானம்
தமிழகப் புலவர் குழு உறுப்பினரும் மேனாள் பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தரும் சமச்சீர்க்கல்வித் தந்தையுமாகிய அறிஞர் ச.முத்துக்குமரன் அவர்களின் மறைவு பெருந்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டுப் பொதுப்பணித்துறையில் பொறியாளராகப் பணியேற்று கிண்டி பொறியியல் கல்லூரிப் பேராசிரியர், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் தனி அலுவலர் ,இந்திய அரசின் துணைக்கல்வி ஆய்வுரையறிஞர், அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர்,பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர், தமிழ்நாட்டரசின் உயர்கல்விமன்றத்தின் உறுப்பினர்-செயலர், உயர்கல்விமன்றத் துணைத்தலைவர் எனப் பல்வேறு பொறுப்புகளையேற்றுத் திறமிக்க பணியாற்றிய அப் பெருந்தகை தமிழ்நாட்டரசின் அறிவியல் நகரத்தின் செயற்குழுத்தலைவராகப் பணியாற்றியும் தமிழக அரசின் சமச்சீர்க்கல்விக் குழுவின் தலைவராகப் பணியாற்றியும் புதிய வரலாறு படைத்தார்.அந்தப் பேரறிஞரின் மறைவு ஈடு செய்ய இயலா இழப்பாகும்..அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தினர்க்கும் உற்றார் உறவினர்க்கும் நண்பர்களுக்கும் தமிழகப் புலவர்குழுவும் அண்ணாநகர்த்தமிழ்ச்சங்கமும் தமது மனமார்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றன. அவர் கனவு கண்ட “அனைத்துப் பள்ளிகளிலும் “கட்டாயத் தாய்மொழிவழிக் கல்வி” நனவாக்குதற்கு உரிய செயல்திட்டங்களில் உடனே ஈடுபடுமாறு அரசியல் தலைவர்களைக் கேட்டுக் கொள்கின்றன.              இங்ஙனம்,
மறைமலைஇலக்குவனார் ,செயலாளர்,  தமிழகப் புலவர் குழு
த.சுந்தரராசுலு, செயலாளர், அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம்
(பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் வழங்கிய கையறுநிலைக் கவிதையை இங்கே இணைத்துள்ள காணொளி நறுக்கில் கேட்கலாம்.)


Tuesday, December 29, 2015

மக்கள் நலப் பணியில் கவிதை உறவு

மக்கள் நலப் பணியில் 
'கவிதை உறவு'

29/12/2015 அன்றுகவிதைஉறவு’ சார்பாக சென்னை டாக்டர் இராதாகிருட்டிணன் நகர் மக்கள், அறந்தாங்கி வட்டம் மேற்பனைக்காடுகிராம மக்களளாகியோரின் ஒத்துழைப்போடும் நெல்லை ராஜதீபன் ஜூவல்லரி, டாக்டர் அமுதா பாலகிருஷ்ணன், ‘கவிதைஉறவு’ குமரி மாவட்டக்கிளை,தொழிலதிபர் கந்தசாமிஆச்சாரி, .பதி ஆகியோரின் உதவிகளோடும் வெள்ள துயர்தணிப்புப்பொருட்கள் வழங்கப்பட்டன.தேசியமணி இல கணேசன், இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனர் டாக்டர் சதக்கத்துல்லா ஆகியோர் துயர்தணிப்புப்பொருட்களை வழங்கினர்.

எழுத்தால் மட்டுமின்றிச் செயலாலும் மக்கள் நலன் மேம்படப் பணியாற்றும் கவிதை உறவு ஆசிரியர் கவிஞர் ஏர்வாடி இராதாகிருட்டிணன் அவர்களைப் பாராட்டுகிறோம்.அவருக்குத் துணைநின்ற  எழுத்தாளர் அமுதா பாலகிருட்டிணன் அவர்களையும் ஏனைய நண்பர்களையும் மனமாரப் பாராட்டுகிறோம்.




Tuesday, December 15, 2015

மருத்துவ மாமணி கண்ணப்பன் விழா



டாக்டர் ஜே.ஜி.கண்ணப்பன் அவர்களின் 81ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா, 5ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு 2015 டிசம்பர் 13ஆம் தேதி இந்திய அதிகாரிகள் சங்க நூற்றாண்டுவிழா அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடந்தேறியது. முதலில் செல்வி பிரத்திக்ஷா குழுவினர் ‘’குருவின் மகிமை’’ என்ற தலைப்பில் அருமையானதொரு கதை இசைப் பொழிவொன்றை நிகழ்த்தி அனைவரையும் பிரம்மிக்க வைத்தனர்.
     முனைவர் கற்பகம் இறைவணக்கம் பாட டாக்டர் திருச்செல்வம் அவர்கள் அனைவரையும் இனிது வரவேற்றார். டாக்டர் கண்ணப்பன் அவர்களின் அண்ணன் டாக்டர் சண்முகநாதன் அவர்கள் நல்லதொரு தலைமையுரை நிகழ்த்தினார்.  சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் தாண்டவன் அவர்கள் முனைவர் வாசுகி கண்ணப்பன் அவர்களின் முனைவர்பட்ட ஆய்வு நூலான ‘’மானுட மாண்பு போற்றும் கவிஞர் குலோத்துங்கன்’’ என்ற நூலை வெளியிட தேசியமணி இல.கணேசன் அவர்கள் பெற்று  அருமையானதொரு சிறப்புரை ஆற்றி டாக்டர் கண்ணப்பன், முனைவர் திருமதி வாசுகிகண்ணப்பன் என்ற இனிய இணையரைப்பற்றி  பெருமைபட பேசினார்.
     தேசியமணி இல கணேசன் அவர்கள் டாக்டர் கண்ணப்பன்-வாசுகி அறக்கட்டளையின் 22ஆம் ஆண்டு விருதுகளை வழங்கிச் சிறப்புச் செய்தார். முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்களுக்கு ‘’அறிவியல் தமிழ் ஆதவன்’’ என்றும், குறள்ஞானி மோகனராசு அவர்களுக்கு ‘’திருக்குறள் செவ்வேள்’’ என்றும், டாக்டர் நாகேஷ் அவர்களுக்கு ‘’சிறந்த தடய அறிவியல் அறிஞர்’’ என்றும், வழக்கறிஞர் பாலசீனிவாசன் அவர்களுக்கு ‘’இளையோரைச் செதுக்கும் சிற்பி’’ என்ற விருதகளை வழங்கி, விருதாளர்களையும் டாக்டர் கண்ணப்பன் அவரகளின் குடும்பத்தையும் பெருமைபட வாழ்த்தினார்.           

     அடுத்து, இசைக்கவி இரமணன் அவர்கள் ‘’விதியும், மதியும்’’ என்ற தலைப்பில் அருமையானதொரு டாக்டர் கண்ணப்பன்-வாசுகி அறக்கட்டைளைச் சொற்பொழிவை ஆற்றி அனைவரையும் அசத்தினார். சென்னைப் பல்கலைக் கழக வருகைப் பேராசிரியர் முனைவர் மு.சிவச்சந்திரன் அவர்கள் நூலினைத் திறனாய்வு செய்து மகிழ்வித்தார். விருதுகள் வாங்கினவர்களின் சார்பில் முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்கள் ஏற்புரை வழங்கி நன்றி தெரிவித்தார். நிறைவாக முனைவர் வாசுகி கண்ணப்பன் அவர்கள் நிறைவுரையுடன், நன்றியுரை கூற தமிழ்ப்பண்ணுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.   
          
      மருத்துவர்   திருச்செல்வம் அவர்களின் வரவேற்புரைக்காட்சி




முனைவர் வாசுகி கண்ணப்பன் அவர்களின் ஆய்வுநூல் வெளியீடு

                 
                  குறள்ஞானி மோகனராசர் விருது பெறும் காட்சி
                                         

பெங்களூர்ப் பல்மருத்துவ மேதை நாகேசு விருது பெறும் காட்சி

மறைமலை இலக்குவனார் விருது பெறும் காட்சி



வழக்கறிஞர் பால.சீனிவாசன் விருது பெறுகிறார்


முனைவர் வாசுகி கண்ணப்பன் நன்றி நவிலும் காட்சி

Sunday, December 13, 2015

சொந்தக் கதை

எண்ணிப் பார்த்தால் எனக்கே நகைப்பாம்
அறுபது  அகலுது  வருவது எழுபது
எண்களில்  மட்டுமே இந்த மற்றம்
எனக்குள் எந்த மாற்றமும் இலையே!
பிறந்தேன் எனல்பிழை பெற்றனர் என்னை;\
இலக்குவர் மலர்க்கொடி இணையர் அன்பால்
உலகினில் தோன்றினேன் என்செயல் என்ன?
வந்தேன் வளர்ந்தேன் வண்டமிழ்ச் சூழலில்!
கல்வியால் பதவியும் பதவியால் செல்வமும்
மேலும் மேலும் மேன்மையும் தேடிய
அறிஞர் நிறைந்த அருந்தமிழ் நாட்டில்
கல்வியும் பதவியும் செல்வமும் கொண்டே
தமிழின் உரிமை மீட்கும் பணியில்
தளரா(து) உழைத்தவர் என்னருந் தந்தை
கற்ற கல்வி  பெற்ற பதவி
உற்ற செல்வம் உயர்ந்திடும் பொழுதில்
கொண்ட கொள்கை  மாறா உறுதியும்
வண்டமிழ் நலன் காத்திடும்  பொறுப்பும்
இலக்குவப் பெரியோர் துலக்கமாய்ச் செய்தார்
அலக்கண் உற்றார் கலக்கம் செற்றார்
காவினெம் கலனே சுருக்கினெம் கலப்பை
மேவினோம் எம்வழி என்னும் தறுகண்
சங்கப் புலவர் ஏற்றதைப் போன்றே
இலக்குவப் பெருந்தகை இயல்பாய்க் கொண்டார்!
ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வோர் பணியிடம்!
கெஞ்சிப் பணிவதும் அஞ்சிக் குனிவதும்
நரிகளின் இயல்பு;அரிமாப் புலவர்
இலக்குவர்க்(கு) அஞ்சுவர் தமிழின் பகைவர்
மறைமலை யடிகளின் தமிழியல் நோக்கும்
பெரியார் வகுத்த  திராவிடப் போக்கும்
தம்மிரு கண்களாய்ப் போற்றினார் இலக்குவர்.
அன்னவர் மைந்தனாய்  அவனியில் வந்தவன்
பின்னொரு மாற்றும் எண்ணிடுவானோ?
புகுமுக வகுப்புப் பயிலும் போதே
அறிவியல் தமிழை வளர்த்திடும் நோக்கம்
அரும்பியதென்பால்;அறிவியல்  பட்டம்\
விரும்பியே சேர்ந்தேன் பயிலும் பொழுதே
தென்மொழி குறள்நெறி செந்தமிழ்ச் செல்வியில்
அறிவியல் கட்டுரை ஆக்கி மகிழ்ந்தேன்;
பட்டம் பெற்று வெளியே வருமுன்
இந்தி எதிர்ப்பில் சிறைக்குச் சென்ற
தந்தை பணிக்குத் துணை நின்றிட
மெய்ப்புத் திருத்தவும் செய்தி தொகுக்கவும்
குறள்நெறி இதழின் பொறுப்பும் ஏற்றேன்;
ஏழு திஙகள்  அவர்வழி இயங்கினேன்;
இலக்குவர் நடத்திய இன்றமிழ்க் :குறள்நெறி”
நாளிதழ் விற்றது நான்காயிரமாம்
வாங்கி விற்கும் முகவர் கூறினர்
விற்ற பணத்தை விழுங்கிய செயலால்
முகவர் செய்த மோசடிச் செயலால்
பொருள்மிக இழந்தோம்;புறக்கணிப்புண்டோம்
முறையாய் அவரெலாம் பணமளித் திருந்தால்
குறள்நெறி நாளிதழ் இன்றைய வேளையில்
பொன்விழாக் கண்டு பொலிவடைந்திருக்கும்!
‘மே’யில் தொடங்கிய மேன்மை நாளிதழ்
திசம்பர்த் திங்களில் கசங்கிப் போனதே!
அன்றைய வேளையில் அல்லலும் துன்பமும்
கன்றிய உள்ளமும் வெம்பச் செய்ததே
எங்கள் உள்ளத்தை  எவரே அறிவார்
யாம்  உணர்ந்த  கசப்பின் கடுப்பை?
இலக்குவர் நாளிதழ் தொடங்கினார் என்றதும்
இதற்குப் போட்டியாய் அதுவா என்றே
ஒருசிலர் வினவினர் உட்பொருள் வைத்தே!
தமிழகம் முழுவதும் முன்பணம் கட்டி
முகவர் முன்வந்த செய்தி சிலரை
முகம்சுளிக்கச் செய்ததறியோம்!
தகுந்த வழிகளில்  இதழை முடக்க
மிகுந்த முயற்சி மேற்கொண்டமையே
முகவர் கொண்ட பகைப்போக்(கு) என்பதை
அறிந்து கொள்ள ஆண்டுகள் சென்றன!
சனவரி முதல் ஏப்பிரல் வரைக்கும்
நான்கு திங்கள் நல்ல வேளையாய்
மாண்புடன் கழிந்தன திடுமெனக் கிடைத்த
கல்லூரிப் பயிற்றாசிரியர் பதவியில்!
சிவகாசி நகர்க் கல்லூரி ஒன்று
உவப்புடன் வழங்கிய விடுமுறைப் பணியால்
பயிற்சி பெற்றேன் பணமும் பெற்றேன்!
‘அய்யா நாடார் சானகி அம்மாள்
கல்லூரி’ வாழ்வில் முதன்முதல் பதவியை
வழங்கிய நன்றி மறவேன் என்றும்

                                   (தொடரும்..?)