Friday, June 26, 2015

ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் நடத்திய கலைச்சுடர் பி.யு.சின்னப்பா நூற்றாண்டுவிழா


ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் நடத்திய  கலைச்சுடர் பி.யு.சின்னப்பா நூற்றாண்டுவிழா

எழுபதாண்டுகளாகச் சென்னையில் தமிழ்ப்பணியாற்றி வரும் சென்னை ஒய்.எம்.சி.ஏ.எசுபளனேடு கிளையுடன் இனைந்த சென்னை ஒய்.எம்.சி,ஏ, பட்டிமன்றம்  செவ்வாய்க்கிழமைதோறும் சென்னை ஒய்.எம்.சி,ஏ கட்டடத்தில் முதல் மாடியில் அமைந்த மக்கானோகி அரங்கில் கூடித் தமிழ்விழாக்களை,கருத்தரங்குகளை,சிறப்புச் சொற்பொழிவுகளை நிகழ்த்திவருகிறது.மே திங்கள் மட்டும் கோடையை முன்னிட்டு அங்குக் கூட்டங்கள் நடத்துவதில்லை.
இயல்,இசை,நாடகம் என்னும் முத்தமிழிலும் அரும்பணியாற்றிய சான்றோர்களுக்கு விழா எடுப்பதிலும்  சென்னை ஒய்.எம்.சி,ஏபட்டிமன்றமே முன்னோடியாய் விளங்கிவருகிறது.அவ்வகையில் கலைச்சுடர் பி.யு.சின்னப்பா அவர்களின் நூற்றாண்ட விழாவைக் கடந்த 9/6/15  சிறப்பாக நடத்தியது.இனிக் கவிஞர் திருமதி பானுமதி அவர்கள் வழங்கிய இக் கூட்டம் குறித்த அறிக்கையைக் காண்போம்
புதுகை எனும் புதுக்கோட்டையின் கலைச் செல்வர் திரு சின்னப்பா அவர்களின் 100-வது, பிறந்த நாள் விழா சென்னையில்,பாரி முனை  கிருத்துவ இளைஞர் மன்றத்தில் 09-06-15 அன்று திரு.சொல்லருவி முத்து சீனிவாசன் தலைமையில், மன்ற பட்டிமன்ற செயலளார் திரு..பக்தவத்சலம், இலக்கிய ஆர்வலர் திரு. பி.வெங்கட்ராமன்,புதுகைத் தென்றல் ஆசிரியர் திரு. தர்மராஜன்,மற்றும்திரு.இராஜேந்திரன் ஆகியோரின் சிறப்பான உரைகளுடன் இனிதாக நடை பெற்றது.அந்தத் தருணத்தில் சிறப்பு மடல் திரு பி. வெங்கட்ராமன்(பி வி) அவர்களால் வெளியிடப்பட்டது.எதிரொலி விஸ்வனாதன்,வி சண்முகம்,மா தாமோதரக் கண்ணன்,குமரி அமுதன்,நீரை.அத்திப்பூ, ப்ருந்தாவனன், மற்றும் பி. வி அவர்களின் கவிதைகளும், கட்டுரைகளும் மடலுக்கு மகுடம் சேர்த்தன.. திரு. கன்னிக்கோயில் இராஜா அவர்களும் விழா மடலை நன்கு அமைதுத்தந்துள்ளார்.

மேடை மற்றும் திரைப்பட நடிகர் மற்றும் பாடகரான திரு. சின்னப்பாவிற்கு இப்படி ஒரு விழா எடுத்து சிறப்பிக்க முழு முயற்சி எடுத்த திரு. பி.வி அவர்களுக்கும்,அருமையாக அமைத்துத்தந்த மன்ற செயளாலர் அவர்களுக்கும் தமிழ் கூறும் நல்லுலகம் கடமைப் பட்டுள்ளது. விழாவில் பல அரிய செய்திகள் பகிரப்பட்டன. 
வாழ்வை கலையாக்கி வளர் கலையெய் வாழ்வாக்கி ,மா மனிதர்களை உருவாக்கிய பெருமை மிகுந்த புதுக்கோட்டை, கலை உலகிற்கு வழங்கிய பல நல் இரத்தினங்கள் என்றுமே வரலாறு ! அவற்றுள் வண்ணங்களை வாரியிறைக்கும்   வைரம் எனத் திகழ்பவர் திரு. பி. . சின்னப்பா அவர்கள்.மிகக் குறைந்தவருடங்கள் தான் வாழ்ந்தார்; பாடுவதிலும். நடிப்பிலும் மிகநிறைவான சாதனைகள் செய்தார்

நா.டக நடிகரான திரு. உலகனாதன் பிள்ளைக்கும், திருமதி. மீனாக்ஷி அம்மாளுக்கும் 05-05-1916இல் மூத்த பிள்ளையாகப் பிறந்தார். இரு தங்கைகள் இவருக்குபாடுவதும், நடிப்பதும் கருவிலே திருஉடைய இவருக்கு நீரில் மீன் குஞ்சினைப் போல் இயல்பானது. நல்ல குரல் வளமும்,பாவமும் இவருக்கென்று ரசிகப் பட்டாளத்தையே ,பஜனைப்  பாடல்கள் முதல் நாடகப் பாடல்கள் வரை உருவாக்கித் தந்தன. மீன லோசனி தத்துவ பால சபாவில் நடிக்கத்  துவங்கிய இவர்மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் இணைந்தார். பாட்டுத் திறத்தாலே சிறு வேடங்களிலிருந்து முக்கிய நடிகரானார். எம். ஜி. சக்ரபாணி, எம். கே. இராதா,பி. ஜி. வெங்கடேசன், எம் ஆர். ஜானகி, எம்.ஜி. ஆர்ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்;இலங்கை, ரங்கூன் முதலிய இடங்களுக்கும் சென்று சிறப்பாக செயலாற்றிஉள்ளார்.

பின்னர் பாய்ஸ் கம்பெனியிலிருந்து, தந்திரமாக வெளியேறி, சிறப்பு நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.வெள்ளித் திரையில் இவரது திருப்பு முனைசந்திர காந்தா 1936-இல் வெளியாகி அமோக வரவேற்பு பெற்றது.1940 இல் வெளிவந்த உத்தம புத்திரனில் இரு வேடம் தாங்கி இணையற்ற புகழ் அடைந்தார்.

பிருத்விராஜன் திரைப்படத்தில், தன் கதானாயகியாக நடித்த திருமதி . சகுந்தலாவை தன் இல் வாழ்க்கைத் துணையாகக் கொண்டார். ஒரே மகன்- திரு . ராஜா பஹதூர்.இவர் கோயில் புறா என்ற திரைப்படத்தில் கதானாயகனாக அறிமுகமானார்.பிறகு இவரைப் பற்றி குறிப்பிடத்தகுந்த தகவல்கள் இல்லை.

சில வெற்றிப் படங்கள், சில தோல்விப் படங்கள். எழுந்தும் விழுந்துமாக  பி.. சின்னப்பாவின் திரைஉலக வாழ்க்கை. இருபத்தாறு படங்கள் நாயகனாக நடித்துள்ளார்.முப்பது சொந்த வீடுகள் இவருக்கு இருந்தனவாம்! ஆனால், இவர் இறந்த பிறகு ஒன்றுமே இல்லை.

மனோன்மணி, “கண்ணகி அவரை நடிகர் மன்னனாக நிலை நிறுத்தின.

டி. ஆர். சுந்தரம் என்னும் அற்புத இயக்குனர் இவருக்கு மறு வாழ்வு தந்தார் ஜகதலப் ப்ரதாபன் என்ற  சினிமாவினால். அந்தக்  காலத்தில் ஒரு பாடல் காட்சியில் ஐந்து வேடமிட்டு (பாடகராக, வயலின் வாசிப்பவராக,மிருதங்கம் வாசிப்பவராக,கஞ்சிரா கலைஞராக, கொன்னக்கோல் வித்வானாக) இவர் பாடிய கல்யாணி ராகப் பாடலை(தாயைப் பணிவேன்) கேட்காதவர்கள் செவியிருந்தும் கேளாதவரே!......

அருமையான குழைவும், நளினமும்,தாவும் ஸ்வரப் பின்னலும், மாறும் தாள நடையும்,கஞ்சிராவில் ரவை தடவும் அழகும், பிசகாத கொன்னக்கோலும், அதைப் படமாக்கிய விதமும் திகட்டாத விருந்து.
திரு. சின்னப்பா .
மே 5-ம் தேதி,1916-ல் புதுகையில் பிறந்த சின்னப்பா நாலாவது வரை தான் படித்தார். தன் திறமைகளால் நாடறிந்த நடிகர் ஆனார்.பாடல், வசன உச்சரிப்பு,வாள், சுருள் கத்தி, குஸ்தி மல் யுத்தம் போன்றவற்றில் அற்புதமான திறன்  பெற்ற இவர் நடித்தது 26 படங்கள். இரண்டு முதல் 10 வரை பல வேடம் தாங்கி அசத்திய இவர் 8 படங்களுக்கு மேல் வெள்ளி விழா கண்டவர். 35 வயதில் இந்த உன்னதக் கலைஞன் மறைந்தார்.

பல திறமைகள் கொண்டவர் பி. . சின்னப்பா. நல்ல உடல் வாகு,கம்பீரமான குரல்,துள்ளும் இளமை, நிறைந்த ஞாபக சக்தி,உண்மையாகவே வாள் சண்டை ,சுருள் கத்தி சண்டை, மல் யுத்தம், மான் கொம்பு சண்டை, பளு தூக்குதல் என அவர் முரட்டுக் காளையாக இருந்தவர். அவர் ரசிகர்களும், எம். கே. தியாகராஜ பாகவதரின் ரசிகர்களும் அடிக்கடி மோதிக் கொள்வார்களாம்.



தொகுத்து வழங்கியவர்-திருமதி.பானுமதி நடராசன்
வலமிருந்து:புதுக்கோட்டை ப.வேங்கடராமன்,செயலர் கெ.பக்தவத்சலம்,புதுகை முத்து சீனிவாசன்,புதுகைத்தென்றல் தருமராசன்,,புதுகை இராசேந்திரன்

Monday, June 8, 2015

இலக்கியப்பித்தன்



இலக்கியப்பித்தன்  இறைநெறிச் சொற்பொழிவு 



 எம்.காம்,எம்.பி.ஏ.,எம்.பில் ஆகிய பட்டங்களைப் பெற்றவரும் முனைவர் பட்டப்பேற்றிற்காக ஆய்வு நிகழ்த்திவருபவருமாகிய இலக்கியப்பித்தன் நாடெங்கும் நற்றமிழ் முழக்கம் பொழிந்துவருகிறார்.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், ஓலையூர் கிராமத்தில் புதியதாக கட்டப்பட்ட அருள்மிகு ராகவேந்திர அடிகளின் திருக்கோயிலுக்கு புதுமைசேர் குடமுழுக்கு 07.06.15 அன்று காலை 09.30 மணிக்குச் சிறப்பாக நடந்தது இதில் சிறப்பு நிகழ்ச்சியாக திரு. இலக்கியப்பித்தன் அவர்களின்  இறைநெறிச் சொற்பொழிவு நடைபெற்றது... தலைப்பு:-... அருள்மிகு ராகவேந்திர அடிகளின்   வாழ்க்கை வரலாற்றையும்,  வேதம் மற்றும் இறையியல், இலக்கியம், இசை முதலானவற்றில் அவர் கொண்ட ஈடுபாட்டைப் பற்றியும் அவரின் நூல்கள் பற்றியும் திரு.இலக்கியப்பித்தன் அவர்கள் விரிவாகவும் எளிமையாகவும் நகைச்சுவை உணர்வோடும் இரண்டு மணிநேரம் மிகச்சிறப்பாக எடுத்துரைத்தார்....

Thursday, June 4, 2015

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்





ஒய்.எம்.சி.. பட்டிமன்றம்  என்னும் அமைப்பு அறுபத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னால் சொல்லின் செல்வர் இரா.பி.சேதுப்பிள்ளை அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. ஒய்.எம்.சி.ஏ. என்னும் உலகளாவிய அமைப்பின்.சென்னைக் கிளையின் இலக்கியப்பிரிவாக உயர்நீதிமன்றத்திற்கு எதிரில் அமைந்துள்ள தொன்மைவாய்ந்த ஒய்.எம்.சி.ஏ. கட்ட்ட்த்தின் முதல் மாடியில் செவ்வாய் தோறும் இங்கே பல துறைகளில் அறிவார்ந்த பொழிவுகல் பல்துறை வித்தகர்களால் நிகழ்த்தப்பெற்று வருகிறது.
மே திங்களைத் தவிர ஏனைய அனைத்துத் திங்களிலும் செவ்வாய் தோறும் இக் கூட்டங்கள் கருத்துவிருந்து வழங்கி வருகின்றன.வெலியூரிலிருந்து வருபவர்கல் கூடச் செவ்வய்க்கிழமை பாரிமுனைப் [பகுத்திக்கு வந்து விட்டால் இங்கே வந்து பயனடைந்து செல்வது வழக்கம்.
நாடறிந்த நாவலர் ஔவை.நடராசன் அவர்கள் இதன் தலைவராக விளங்குகிறார்.கடந்த ஐம்பது ஆண்டுக் காலமாகப் பொறியாளர் கெ.பக்தவத்சலனார் இதன் செயல்திறம் மிக்க செயலாளராக விளங்ஃப்கி இதனை ஒரு பல்கலைக்கழகம் போல இயங்கச் செய்துவருகிறார்.
மறைமலை இலக்குவனார் துணைத்தலைவராகவும் பு.சீ.கிருட்டிணமூர்த்தி இணைச் செயலராகவும் இம் மன்றப்பணிகளில் செயலருக்கு உறுதுணை புரிந்து வருகின்றனர்.
செவ்வாய் தோறும் நடந்து வரும் ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றக் கூட்டங்கள் பற்றிய தொகுப்புரையை எழுதி வழங்கும் பொறுப்பைப் பேராசிரியர் ப.தாமரைக்கண்ணன் ஏற்றுள்ளார்.
இனி தாமரைக்கண்ணன் வழங்கும் தொகுப்புரையைக் காணலாம்.
”  செவ்வாய்தோறும் செந்தமிழ் வளர்க்கும் ஒய்.எம்.சி.எ. பட்டிமன்றக்  கூட்டம் மே மாதம் கோடை விடுமுறைக்குப் பின் மீண்டும் எழுச்சியுடன் 2.6.2015 செவ்வாய் மாலை 6 மணிக்கு இனிதே தொடர்ந்து தொடங்கியது.

நந்தனம் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் (பணிநிறைவு) செ. ஏழுமலை அவர்களின் தலைமையில் மதுராந்தகம் சமற்கிருதக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் பெ.கி. பிரபாகரன் அவர்கள்,   'தமிழ்த் திரைப்படப் பாடல்களில் இலக்கியச் செல்வாக்கு' என்னும் தலைப்பினில் இசையுரை ஆற்றினார்.
.பட்டிமன்ற இணைச் செயலாளர்  புலவர் பு.சீ .கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பெருந்திரளாக வந்திருந்த அறிஞர்பெருமக்களை இன்முகத்துடன் வரவேற்றுப் பேசினார்.
    தலைமையேற்றுப் பேசிய பேராசிரியர் செ . ஏழுமலை  அவர்கள், ”இந்த மே 31 ஓய்வு  பெற்ற என்னை, நண்பர் தாமரை தொடர்ந்து அன்புடன் அழைத்தபோதெல்லாம் என்னால் வர இயலவில்லை. இந்தக் கூட்டத்தின் தலைப்பைக் கேட்டதும் என்னால் வராமல் இருக்க முடியவில்லை. காரணம் என் பொழுதுபோக்கே பழைய திரைப் பாடல்களைக் கேட்டு மகிழ்வதுதான். அதனாலும் பிரபாகரன்தான் என்னுடைய எல்லா விழாவுக்கும் தொகுப்புரைஞராக அமைவார்; அவர் மேலுள்ள அன்பினாலும் இங்கு வந்தேன். பேரறிஞர் பலர் பேசிய பட்டிமன்றத்திற்கு வருவதில் பேருவகை அடைகிறேன். தொடர்ந்து வருவேன் என்றார். 

     சி றப்புரையாற்றிய பேராசிரியர் பெ.கி.பிரபாகரன் அவர்கள் தமிழ்த் திரைப்படப் பாடல்களில் பெரும்பங்களிப்பாற்றிய பாடலாசிரியர்கள் பலரை நினைவுகூர்ந்தார். உடுமலை நாராயணகவி, உவமைக்கவிஞர் சுரதா,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசர் கண்ணதாசன், வாலி முதலானோரின் பாடல்களில் இலக்கியச் செல்வாக்கினைப பற்றிப்  பல சான்றுகளைக் காட்டியும் பாடியும் காட்டிப் பயன்கொள்ளச் செய்தார். காப்பியடிப்பது வேறு; செல்வாக்கினால் எழுதுவது வேறு என்று பதிய வைத்தார்.

இலக்கியங்களை எளிமைப் படுத்தித் தொண்டு செய்த பாடலாசிரியரின் தொண்டுக்குத் தலைவணங்கி நன்றி சொல்வோம் என்று இறுதியில் தாமரைக்கண்ணன் நன்றி கூறி, எதிர்வரும் ஒய்.எம்.சி.எ. பட்டிமன்ற எழுபதாம் ஆண்டு விழாவுக்கான நன்கொடைகளை வேண்டி நிறைவு செய்தார்.