Sunday, April 24, 2016

ஔவைக்கு முத்துவிழா

                              ஔவைக்கு முத்துவிழா
24/4/2016 அன்று முனைவர் ஔவைநடராசன் வரகளின் 81-ஆம் பிறந்தநாள்.ஆம்.அன்று அவர் முத்துவிழாக் காண்கிறார்.எளிமையை விரும்பும் அவருக்கும் அவர்தம் துணைவியார் மருத்துவமாமணி தாராபாய் அவர்களுக்கும் பெரிய விழாக்களில் விருப்பமில்லை.எனவே அவருக்குப் புலவர்குழுவின் சார்பில் எங்கள் வாழ்த்துகளை அவருடைய இல்லத்துக்குச் சென்று தெரிவிக்கலாம் என முடிவு செய்தோம்.எங்கள் புலவர்குழுத்தலைவர் சிலம்பொலியார் ஆவார்.இந்தச் சுட்டெரிக்கும் வெயிலில் அவர் திருவான்மியூரிலிருந்து பயணம் மேற்கொள்ளவேண்டாம் என வலியுறுத்திக் கூறினோம். நேரில் வருவேன் என அவர் கூறினாலும் இந்த வெயிலில் அவர் தொலைபேசி  மூலம் வாழ்த்துத் தெரிவிப்பதே நலம் என நாங்கள் வேண்டிக்கொண்டதனை அவர் ஏற்றுக் கொண்டார்.
புலவர்குழுப் பொறுப்பாண்மைக்குழுத் தலைவர்  மருத்துவர் மணிமேகலை கண்ணன்,புலவர்குழுத் துணைத்தலைவர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் செயற்குழு உறுப்பினர் முனைவர் வாசுகி கண்ணப்பன் அவர்கள்,செயலாளராகிய நான்(மறைமலை( ஔவை அவர்களின் இல்லத்துக்குக் காலை பத்தரை மணிக்குச் சென்றோம்.எழுத்தாளர் கழகச் சார்பிலும் கவிதை உறவு சார்பிலும் கவிஞர் ஏர்வாடியார், மேலும் மேனாள் மேயர் சா.கணேசன் ,த.கு.திவாகரன் ஆகியோரும் ஔவைபால் கொண்ட அன்பால் வந்திருந்தனர்.
பெருங்கவிக்கோ ஔவை வாழ்விணையரை வாழ்த்தி  ஒரு வாழ்த்துப்பா  இயற்றி வழங்கினார்.
முனைவர் வாசுகி கண்ணப்பன் அவர்கள் ஒரு வாழ்த்துப்பாடலைப் பாடினார்
அதன்பின்னர் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களையும் அன்பையும் தெரிவித்து விடைபெற்றனர்.வந்திருந்த அனைவரையும் வரவேற்று ஔவை அவர்களின் புதல்வர் முனைவர் அருள்,அவரது துணைவியார் சாலைவாணி ஆகிய இருவரும் சிற்றுண்டி வழங்கினர்.நல்லறிஞரையும் அவரது துணைவியார் அவர்களையும் வாழ்த்திய மகிழ்வில் அனைவரும் விடைபெற்றனர்.

No comments:

Post a Comment